Friday 26 June 2020

67 . கருணை பெறாது இரங்கல்

                                         67 .  கருணை  பெறாது  இரங்கல்

                நன்றி  ஒன்றிய  நின்னடி  யவர்க்கே 
                       நானும்  இங்கொரு  நாயடி  யவன்காண்
                குன்றின்  ஒன்றிய  இடர்மிக  உடையேன்
                       குற்றம்  நீக்கும்நல்  குணமிலேன்  எனினும்
                என்றின்  ஒன்றிய  சிவபரஞ்  சுடரே
                       இன்ப  வாரியே  என்னுயிர்த்  துணையே
                ஒன்றின்  ஒன்றிய  உத்தமப்  பொருளே
                       உனைஅ  லால்எனை  உடையவர்  எவரே

                இறைவா  உன்  அடியார்க்கெல்லாம்  அடியேன்  நான்.  மலையளவு  பெருந்துன்பம் 
உடையவன்.  என்குறைகளை  போக்கும்  அறிவு  இல்லாதவன்.  ஆயினும்  என்னுள்  என்
மெய்யிலே  நற்பொருளாக  கண்மணி  ஒளியாக  துலங்குகிறாயே  பரஞ்சுடரே!  இன்பக்கடலே,
என்னுயிர்  துணையே,  என்  உயிரில்  ஒன்றிய  உத்தம  சத்திய  பொருளே,  எனக்கு  உன்னை
விட்டால்  யார்  இருக்கிறார்?!  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரே  அருளுகவே.

                முன்பு தீது  செய்தேன்  இப்போது  தீது  செய்கிறேன்  இனிமேலும்  தீதுசெய்வேன்
இதுவே  என்  இயல்பு.  ஆனால்  இறைவா  உத்தம  பரம்பொருளே  நான்  உனக்கு  செய்வது
ஒன்றுமில்லையே!  அப்படியிருந்தும்  என்னை  ஆண்டு  அருள்கிறாயே  உன்  கருணையை
என்னென்று  போற்றுவேன்!  இறைவா  நீ  எப்படி  என்னை  ஆக்கசித்தம்  கொண்டுள்ளாயோ
அப்படியே  ஆகுக!  எல்லாமான  நீ  என்னை  உய்விப்பாய்  என  மகிழ்வோடு  வாழ்கிறேன்!
நீதானே  எமை  காக்க  வேண்டும்?  உன்  திருவடியே  சரணம்.

No comments:

Post a Comment