58. கொடை மட விண்ணப்பம்
நின்போன்ற தெய்வம்ஒன் றின்றென வேதம் நிகழ்த்தவும்நின்
பொன்போன்ற ஞானப் புதுமலர்த் தாள்துணைப் போற்றுகிலேன்
என்போன்ற ஏழையர் யாண்டுளர் அம்பலத் தேநடஞ்செய்
மின்போன்ற வேணிய னேஒற்றி மேவிய வேதியனே
அம்பலத்தே நடஞ்செய்மின் போன்ற வேணியனே - நாம் எல்லோரும் அறிய அம்பலமாக நம் கண்மணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒளியானவனே! அதிலிருந்து தோன்றும் ஒளிக்கதிர்கள் மின்னலைபோல உள்ளன. அது சிவனின் சடை போல இருக்கிறது! ஒற்றிமேவிய வேதியனே - நம் உடலில் கண்மணியில் ஒன்றியிருக்கும் ஒளியே! வேதங்கள் உரைக்கும் இறைவனே - ஜோதியானவனே - வேதியனே! உன் போன்ற தெய்வம் வேறில்லை. உன் பொன்னான திருவடிகளே எனக்குத்துணை! ஞானத்தை தரும்! இறைவா போற்றுகிறேன் - பணிகிறேன். அருள்புரிக இந்த ஏழைக்கும்!.
மலம் மாற்றுகின்ற விண்ணவனே........................ பாடல் 3
நம் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் உள் இருக்கும் ஒளியாகிய பரம்பொருளை பற்றி நாம் தவம் செய்தால், நம் உள்ஒளி பெருகி ஊசிமுனை துவாரத்தை அடைத்துக் கொண்டிருக்கும் திரையை - மும்மலங்களை எரித்து இல்லாமல் செய்து விடும்! நம் கண்மணியின் உள்பகுதியே விண் - ஆகாயம். விண்ணில் ஒளியாக துலங்குபவனை விண்ணவனே என்றார் வள்ளல் பெருமான்!
அன்று நால்வர்க்கும் யோகமுறை அறந்தான்சொன்னவனே - பாடல் - 5
ஆதியில், முதல்குருவாக தட்சிணா மூர்த்தியாக தோன்றிய பரம்பொருளே! சனகாதி முனிவர் நால்வர்க்கும் ஞானோபதேசம் சொல்லாமல் சொன்னவரே! "சும்மா இருக்கும்" திறத்தை உணர்த்தி காட்டியவரே! இதுவே நாம் செய்யவேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய, உணர்ந்துகொள்ள வேண்டிய சிறந்த அறமாகும்!
ஈன்றவனே அன்பர் இன்னுயிர் .................... பாடல் 6
நம் உடலை தந்ததுதான் தாயும் தந்தையும்! உயிரை தருவது இறைவனே! அதனால்தான் வள்ளல் பெருமான் பரம்பொருளை ஈன்றவனே என்கிறார்!
கங்கரனேமதிக் கண்ணியனே நுதல் கண்ணினனே-பாடல் 7
கங்கரன் - கங்கையுடைய கரத்தையுடையவன். கங்கை என்றால் நீர். வற்றாத நீரையுடைய நமது கண்களே சந்திரன் - சூரியன் ஆகும். இறைவனின் திருவடியாகவும் திருக்கரங்களாகவும் விளங்குவதும் இதுவே! அனுபவ நிலையில் ஒளிக்கதிர்களே கரங்கள் எனப்பட்டது! நுதல் கண்ணினனே - கண்ணிலே இருக்கும் பொருள். வேறென்ன? ஒளிதானே! அதுதானே இறைவன்!
சின்மயனே அனல் செங்கையில் ஏந்தியசேவகனே-பாடல் 8
சின்மயனே - சின்முத்திரை குறிக்கும் கண்ணில் இருப்பவன் சின்மயன் - ஒளி! அனல் செங்கையில் ஏந்திய - நாம் தவம் செய்யும்போது நம் கண்வெள்ளை விழி சிவப்பாக மாறிவிடும்.
அந்நிலையே செங்கை சிவந்தகை என்றும், அனல் அப்போது நிரம்பி இருக்கும். அதனால்தான் அனல் ஏந்திய செங்கை எனப்பட்டது. சேவகன் யார் இறைவன்தான்! பரம்பொருளை நாடிடும் பக்தர்க்கு அவன் சேவகன் போல் எல்லாம் செய்கிறானல்லவா? நமக்கு உயிர் தந்த அந்த இறைவனே நமக்கு வேலைக் காரனாகவும் இருந்து நம்மை காத்தருள்கிறான்!
கண்ணியனே பற்பலவாகும் அண்டங்கள் கண்டவனே-பாடல் 9
எண்ணிலடங்கா அண்டங்கள் பலவும் படைத்து அருளிய அந்த இறைவன் - பரம்பொருள் நம் மெய்யிலே - உடலிலே - மெய்ப்பொருளாக நம் கண்மணியிலே ஒளியாக துலங்குகிறான்! கண்ணிலே நின்று ஒளிர்வதால் வள்ளல்பெருமான் கண்ணியனே என்கிறார்!
ஒற்றிக்கோயிலின் மேவும் குருபரனே - பாடல் 10
நமது கண்மணியில் ஒற்றியிருக்கிறான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன்! அதனால் கண்மணி ஒற்றியூர் என்று ஆனது. திருவாகிய இறைவன் ஒற்றியிருப்பதால் திருவொற்றியூர் எனப்பட்டது. திருவொற்றியூராகிய நம் கண்மணியில் கோயில்கொண்டிருக்கும் அந்த ஜோதியே - ஒளியே - இறைவனே - பரம்பொருளே நமது குருபரன் ஆகும்! நமக்கு உயிர்தந்த பரம்பொருள் நமக்கு சேவகனாக இருக்கும் பரமாத்மாதான் நமக்கு குருவாக இருந்து நம்மை வழிநடத்துவான்!! அந்த இறைவனே - நமது உயிரே - நம் ஆத்மாவே நமக்கு உண்மை குரு!?
அந்த மெய்குருவை பெற சற்குரு வள்ளலார் அனுக்கிரகம் தேவை! அருள்புரிய காத்திருக்கிறார் வள்ளலார்! வாருங்கள்!
ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு சற்குருவை பெற்றேயாக வேண்டும்! சற்குரு மூலமாக உபதேசம் தீட்சை பெற்றுத்தான் - சாதனை - தவம் செய்துதான் மெய்குருவை பெறமுடியும்! இது இறைவன் வகுத்த நியதி! சற்குரு வள்ளலார் அருள்தர காத்திருக்கிறார்! வாருங்கள்!
No comments:
Post a Comment